Archives: ஜூலை 2020

பிரகாசிக்கும் ஒளி

எங்களுக்கு அருகிலுள்ள ஓர் ஆலயத்தில், ஐந்து வாரங்கள் வேதாகம வகுப்பு எடுக்கும்படி, நான் ஒப்புக்கொண்டதிலிருந்து, எனக்கு சற்று  நடுக்கமாக இருந்தது. அந்த மாணவர்கள் இதை விரும்புவார்களா? அவர்கள் என்னை விரும்புவார்களா? என்பதாக என்னுடைய எதிர்பார்ப்பு தவறான காரியங்களின் மீது திருப்பப் பட்டது, அதனால், நான் அதிகமாக தயாரிக்க ஆரம்பித்தேன்- பாடத் திட்டங்கள், மின்னணு தகடுகள், வகுப்பில் கொடுக்க வேண்டிய கைப்பிரதிகள் என பல தயாரிப்புகளைச் செய்தேன். இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், நான் இன்னமும் அநேகரை அதில் கலந்து கொள்ளும்படி அழைக்கவில்லை.

 இந்த வகுப்பு, தேவனுடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கும் ஒரு தேவ பணி என்பதை ஜெபத்தின் மூலம் அறிந்து கொண்டேன். இந்த வகுப்பின் மூலம், பரிசுத்த ஆவியானவர் மக்களை பரலோகத்      தந்தைக்கு நேராக திருப்புவார் என்பதை அறிந்து கொண்ட நான், என்னுடைய உரையைக் குறித்த பயத்தை அகற்றி விட்டேன். மலைப் பிரசங்கத்தின் போது, இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்” (மத்.5:14-15). என்றார்.

இந்த வார்த்தைகளை வாசித்த நான், ஊடகத்தின் வாயிலாக ஓர் அறிவிப்பை வெளியிட்டேன். உடனடியாக, மக்கள் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.  தங்களின் நன்றியையும், ஆர்வத்தையும் தெரிவித்தனர். அவர்களின் பதிலைப் பார்த்த நான், இயேசுவின் போதனையான, “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக் கடவது” (வ.16) என்பதை அதிகமாக தியானித்தேன்.

அந்தக் கண்னோட்டத்துடன், நான் அந்த வகுப்பில், மகிழ்ச்சியோடு கற்றுக் கொடுத்தேன். என்னுடைய எளிய செயல், பிறரை ஊக்கப்படுத்தி, தேவனுடைய ஒளியைப் பிரகாசிக்கும்படி வழி நடத்துமாறு ஜெபிக்கின்றேன்.

தேவையுள்ளோரைத் தொடு

அன்னை தெரெசா, சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார் என்ற செய்தி நம்மை ஆச்சரியப் படுத்துவதாக இல்லை, ஏனெனில், அனைவரின் எதிர்பார்ப்பின் படி, “பசியாயிருப்போர், ஆடையில்லாதிருந்தோர், வீடற்றவர், குருடர், குஷ்டரோகிகள், சமுதாயத்தால் ஒதுக்கப் பட்டோர், அன்பு கூர முடியாதவர், சமுதாயத்தினரால் கவனிக்கப் படாதவர், இவர்களின் பெயரால்” அவர் இந்த விருதைப் பெற்றார். இத்தகையோருக்குப் பணிசெய்வதற்காகவே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டார்.

சூழ் நிலைகள் எவ்வாறு இருப்பினும், தள்ளப்பட்டவர்களை அன்பு செய்வதும், பாதுகாப்பதும் எப்படி என்பதை இயேசு காட்டினார். நோயுற்றோரைக் காட்டிலும் ஓய்வு நாள் சட்டத்தை அதிகமாக மதித்த மதத் தலைவர்களைப் போன்று அல்லாமல், இயேசு வேறுபட்டு செயல் பட்டார் (லூக்.13:14). இயேசு தேவாலயத்திலே ஒரு பெலவீனமான பெண்ணைப் பார்த்த போது, அவள் மீதுள்ள இரக்கத்தினால், மனதுருகினார். அவளுடைய சரீர குறைபாட்டையும் தாண்டி, தேவனுடைய அழகிய படைப்பு கட்டப்பட்டிருப்பதைக் கண்டார். அவர் அவளைத் தன்னிடம் அழைத்தார்,  விடுதலையாக்கப் பட்டாய் என்று கூறி, “அவள் மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப் படுத்தினாள்” (வ.13). அவளைத் தொட்டதினால், அது ஓய்வு நாளாக இருந்ததால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்தான். ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிற (லூக்.6:5) இயேசு, இரக்கத்தோடு, பதினெட்டு ஆண்டுகள், வசதியற்ற நிலையிலும், அவமானத்திற்கும் உள்ளான அவளைச் சுகப்படுத்தும்படி தெரிந்து கொண்டார்.

 நாம் எத்தனை முறை நம்முடைய இரக்கத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் தவறி இருக்கிறோம் என்று  நினைத்துப் பார்த்தேன். மற்றவர்களின் தகுதிக்கு நாம் ஏற்றவர்கள் அல்ல என்பதால், நாம் தள்ளப் பட்டோமா? சக மனிதர்களைக் காட்டிலும் சட்டங்களை உயர்வாக மதிக்கும், உயர்தர மதத் தலைவர்களைப் போலல்லாமல்,  நாம் இயேசுவை மாதிரியாகப் பின்பற்றுவோம், பிறரை இரக்கத்தோடும், அன்போடும், மதிப்போடும் பார்ப்போம்.

அறிவுக்கு அப்பாற்பட்ட இரக்கம்

விஜய் ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்ததால், சுரேஷின்  நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கமுடிந்தது. இருவரும் நண்பர்களாய் இருந்தனர். விஜய் அந்த நிறுவனத்தின் லட்சக்கணக்கான பணத்தை கையாடல் செய்ததை அறிந்த போது சுரேஷ், மிகவும் வருத்தப்பட்டான், கோபப்பட்டான், ஆனால், கிறிஸ்துவின் விசுவாசியான, அவனுடைய பாஸ் அவனுக்கு ஞானமான ஆலோசனை வழங்கினார். விஜய் மிகுந்த வெட்கத்தால், மனம் வருந்துவதை அவனுடைய பாஸ் கண்டார். அவர் சுரேஷிடம், விஜய் மீதுள்ள குற்றச் சாட்டுகளனைத்தையும் கைவிட்டு விட ஆலோசனை கூறினார், அவர் விஜயை வேலைக்கு அமர்த்தினார்.  “அவன் இழப்பைச் சரிக்கட்டும் வரை, அவனுக்கு சாதாரண அளவு சம்பளம் மட்டும் வழங்கு, நீ இவனைப் போல அதிக நன்றியும் உண்மையும் உள்ள ஒரு வேலையாளைப் பார்க்க முடியாது” என்றார். சுரேஷ் அப்படியே செய்தார், விஜயும் அப்படியே மாறினான்.

சவுல் அரசனின் பேரனான மேவிபோசேத் எந்த தவறும் செய்யவில்லை, ஆனாலும், தாவீது அரசனான போது, அவன் ஒரு இக்கட்டான நிலையில் இருந்தான். அநேக ராஜாக்கள், முந்தைய அரச பரம்பரையினரை கொன்று விடுவர். ஆனால், தாவீது, சவுல் அரசனின் மகனான யோனத்தானை நேசித்தான், எனவே அவனுடைய மகனை தன்னுடைய மகனாகப் பாவித்தான். (2 சாமுவேல் 9:1-13). அவனுடைய இரக்கம் ஒரு நண்பனின் வாழ்வைக் காப்பாற்றியது. அப்பொழுது மேவிபோசேத் ஆச்சரியப் பட்டு, “ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு முன்பாக என் தகப்பன் வீட்டார் எல்லாரும் சாவுக்கு ஏதுவாயிருந்தார்களே ஒழிய மற்றப் படியல்ல; ஆனாலும் உமது பந்தியிலே சாப்பிடுகிறவர்களோடே உமது அடியேனை வைத்தீர்” (19:28) என்றான். அவன் தாவீதுக்கு உண்மையாய் இருந்தான். தாவீதின் மகனான அப்சலோம் தாவீது அரசனை எருசலேமை விட்டு துரத்திய போதும் இவன் உண்மையாயிருந்தான் (2 சாமு.16:1-4; 19:24-30).

 நீயும் வாழ்க்கை முழுமைக்கும் உண்மையாய் இருக்கும் நண்பனைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றாயா? ஒரு வித்தியாசமான நபர் உன்னிடமிருந்து, வித்தியாசமான ஒன்றை எதிர் பார்க்கலாம். உன்னுடைய அறிவு ஒருவரைத் தண்டிக்குமாறு கூறலாம், ஆனாலும் இரக்கத்தை தெரிந்து கொள். அவர்களின் பொறுப்பை உணரும்படி செய், தகுதியற்றவர்களாக இருப்பினும், தவறை சரி செய்ய வாய்ப்பளி. இவரை நன்றியும் உண்மையும் உள்ள நண்பனாகக் காணமுடியும். நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட இரக்கத்தோடு சிந்தி.

துயரத்தின் மத்தியில் தேவனை நம்புதல்

“பப்பா ஜாண்” என்று அழைக்கப் படும் ஒரு மனிதன் தான் புற்று நோயின் கடைசி கட்டத்தில் இருப்பதாக அறிந்து கொண்டான். அவனும் அவனுடைய மனைவி கேரலும், நோயோடு தாங்கள் செய்யும் பயணத்தைக்குறித்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள தேவன் விரும்புகின்றார் என்பதை உணர்ந்தனர். அவர்களுடைய பாதிப்பின் வழியாகவும் தேவன் செயல்பட முடியும் என்பதை விசுவாசித்தனர். அவர்களின் மகிழ்ச்சி, துயரம் மற்றும் வேதனை நேரங்களை, இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் பதித்து வந்தனர்.

தன்னுடைய கணவன் “இயேசுவின் விரிந்த கரத்தினுள் சென்று விட்டார்” என்று கேரல் எழுதிய போது, நூற்றுக் கணக்கானோர் பதிலளித்தனர். கேரலின் வெளிப்படையான பகிர்வுக்காக அநேகர் நன்றி கூறினர். கிறிஸ்தவர்களின் மரணம் பற்றி கேட்பது ஒரு வகையில் நன்மையானது, ஏனெனில், “நாம் அனைவரும் ஒரு நாள்  மரிக்கப் போகின்றோம்” என்பதாக ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், நாங்கள் இந்த தம்பதியரை நேரடியாகப் பார்த்ததில்லை எனினும், அவர்கள் தேவன் பேரில் கொண்டுள்ள  நம்பிக்கையைப் பார்த்து,  நாங்களும் எங்களுடைய வாழ்வில் சொல்ல முடியாத அளவு ஊக்கத்தைப் பெற்றுக் கொண்டதாக    தெரிவித்திருந்தார்.

 சில வேளைகளில் பப்பா ஜாண், தாங்கமுடியாத அளவு வேதனையைச் சகித்த போதும், அவனும் கேரலும் தங்களின் கதையை பகிர்ந்து கொள்வதன் மூலம், தேவன் அவர்களை எப்படி தாங்கினார் என்பதை வெளிப்படுத்தினர். அவர்களின் சாட்சி, தேவனுக்கென்று கனி தரும் என்பதை அறிந்திருந்தனர். பவுல் துன்பங்களைச் சகித்த போது, தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராய் இருக்கிறார் என்று நிச்சயித்துமிருக்கிறேன்” (2 தீமோ.1:12) என்றார்.

நாம் நேசிக்கும் நபரின் மரணம் மூலமாகவும் தேவன், நாம் அவர் மீது கொண்டுள்ள விசுவாசத்தை (பிறரின் விசுவாசத்தையும்) கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும் (வ.9) பெலப்படுத்த முடியும். நீயும் வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றாயா?  ஆறுதலையும் சமாதானத்தையும் நம் தேவனால் தர முடியும் என்பதை அறிவாயாக.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்புக்காக தாகம்

சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.